"சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் படங்களுக்கு சான்றிதழ் இல்லை"- ஐகோர்ட்டில் சென்சார் போர்டு பதில்
சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாது என்று சென்சார் போர்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
யுரேகா திரைப்பட பள்ளி என்ற தயாரிப்பு நிறுவனம், லட்சுமி - லாரன்ஸ் காதல் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை சான்று மறுக்கப்பட்டதை எதிர்த்து பட நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில், சென்சார் போர்டு தாக்கல் செய்த பதில்மனுவில், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் மறுக்கப்பட்டது ஒரு தனிப்பட்ட காட்சி அல்லது உரையாடலை அடிப்படையாகக் கொண்டது அல்ல எனவும், திரைப்படம் ஒட்டுமொத்தமாக, சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கிறது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பொது அமைதியைக் குலைத்து, சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் தன்மை கொண்ட, சமூக அமைதியின்மையைத் தூண்டக்கூடிய படைப்புகளை கருத்துச் சுதந்திரம் என அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பிப்ரவரி 11ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.