அன்புமணி மீது பதியப்பட்ட வழக்கு - ஐகோர்ட் போட்ட பரபர உத்தரவு
Apr 23, 2025, 20:20 IST
என்.எல்.சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்காக கதலாழை கிராமத்தில் உள்ள விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நெற்பயிரை அழித்ததை எதிர்த்து பாமகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் என்.எல்.சி அலுவலகத்தின் நுழைவாயிலில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து தென்குத்து கிராம நிர்வாக அலுவலர் கோபால கிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் நெய்வேலி காவல்துறையினர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அன்புமணி ராமதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.