×

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக வழக்கு

 

முதலமைச்சர் விஜய்க்கு எதிராக மூன்று தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்  திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார் விஜய். இரு தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், பின்பு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தசூழலில் திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜயின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சேகர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதேபோல் தவெக தலைவர் விஜய் வெற்றியை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் ஆர்.கே.நகர் தொகுதியில் அமைச்சர் மரியவில்சன் வெற்றி எதிராக வாக்காளர் ஒருவரும், திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணியும் வழக்கு தொடர்ந்துள்ளனர். திருவெறும்பூர் எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி வெற்றியை எதிர்த்து அன்பில் மகேஷ் தேர்தல் வழக்கை தொடர்ந்துள்ளார். மயிலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் வெற்றியை எதிர்த்து வாக்காளர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.