×

உதயநிதிக்கு விஜய் செக்! கே.என்.நேரு வழக்கில் இழுக்கப்பட்ட ரத்தீஷ்

 

கே.என்.நேரு மீது பதிவுசெய்திருந்த வழக்கில் ரத்தீஷ் என்பவரையும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சேர்த்துள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது பதிவு செய்திருக்கும் வழக்கில், யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக ரத்தீஷ் என்பவரையும் வழக்கில் சேர்த்திருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. முன்னாள் துணை முதல்வர் உதயநிதியின் நெருங்கிய நண்பரான ரத்தீஷுக்கு ‘செக்’ வைத்ததன் மூலமாக, உதயநிதிக்கு விஜய் ‘செக்’ வைத்திருப்பதாகச் சொல்கின்றன விவரமறிந்த வட்டாரங்கள்.  இதற்கு முன் டாஸ்மாக் முறைகேட்டில் சிக்கிய ரத்தீஷ் துணை முதல்வருக்கு நெருங்கியவர். போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்ததே தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்களுக்கு முக்கிய காரணம் என சொல்லப்படும் நிலையில் ரத்தீஷ் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார். டாஸ்மாக் விவகாரத்தில் செந்தில் பாலாஜி சிக்கிக் கொண்ட பிறகு, கட்சியின் ‘வளர்ச்சி’ சபரீசனிடமும் உதயநிதியிடமும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுக்கப் பட்டது. அந்த ‘வளர்ச்சி’யை உதயநிதியின் சார்பில் கையாண்டது ரத்தீஷ்தான் என சொல்லப்படுகிறது. சென்னை எம்.ஆர்.சி நகரிலிருக்கும் ‘ஒன் 74’ அடுக்குமாடிக் குடியிருப்பில், வசித்துவரும் ரத்தீஷின் பெயர் லஞ்ச ஒழிப்புத்துறை வசம் சென்றிருப்பது உதயநிதிக்கு நிச்சயம் சிக்கலை வரவழைக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்!

யார் இந்த ரத்தீஷ்?

சென்னை வேளச்சேரியில் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் குடும்பம் வசித்தபோது, அவர் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தவர்தான் ரத்தீஷ் வேலு. தன் நண்பர்களோடு உதயநிதி கிரிக்கெட் விளையாடச் செல்லும்போது, ரத்தீஷும் அவரின் அண்ணன் சர்வேஸ்ராஜும் உடன் செல்வது வழக்கம். அப்படித்தான், ஸ்டாலின் குடும்பத்துடன் ரத்தீஷ் குடும்பத் துக்குப் பழக்கம் உண்டானது. உதயநிதி எதை விருப்பப் பட்டாலும், அதை நிறைவேற்றுவதில் ரத்தீஷ் வித்தகர் என்பதால், நாளடைவில் உதய்க்கு மிக நெருக்கமாகிப்போனார். ரத்தீஷுக்கு, தமிழக சினிமாத்துறையை அறிமுகம் செய்து வைத்து, ஒரு படம் தயாரிக்கும் அளவுக்கு உயர்த்தியவர் உதயநிதிதான். அந்த வகையில், சினிமா வட்டாரங்களிலும் தொடர்புகளை வளர்த்துக்கொண்டார் ரத்தீஷ். அவருடைய அண்ணன் சர்வேஸ் ராஜ், படித்து ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, தலைவர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனுக்கு ஆடிட்டர் சண்முகராஜாவும், உதயநிதிக்கு ரத்தீஷும் காரியதரிசிகளாக மாறினார்கள்.