திடீரென திறக்க முடியாமல் போன கார் கதவு- மூச்சுத்திணறி 4 வயது சிறுவன் பலி
குளித்தலை அருகே கழுகூர் கிராமத்தில் நின்று கொண்டிருந்த காரில் விளையாடிய சிறுவன் கதவை சாத்தியதால் திறக்க முடியாமல் போதனால் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கழுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் கூலி தொழிலாளி வேலு வயது 36, இவரது மனைவி மாரிஸ்வரி வயது 30 கட்டிட சித்தாள் தொழிலாளி.
இவர்களுக்கு, 4 வயதில் சஞ்சீவி மகன் உள்ளார். இன்று காலை 9 மணி அளவில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சஞ்சீவி தனது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் கதவைத் திறந்து உள்ளே விளையாடிக் கொண்டிருந்தபோது கதவு பூட்டி கொண்டதால், வெகு நேரமாகியும் தனது மகன் காணவில்லை என பல இடங்களில் தேடிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர். தனது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது கவர் போட்டு மூடி இருந்தது,
சந்தேகத்தின் பெயரில் மதியம் ஒரு மணி அளவில் காரில் இருந்த கவரை நீக்கிவிட்டு கண்ணாடி வழியாக பார்த்தபோது சிறுவன் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்தது. அருகில் இருந்த உறவினர்கள், பொதுமக்கள் காரை திறந்து சிறுவனை மீட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பணியில் இருந்த மருத்துவர் சிறுவனை பரிசோதனை செய்த போது சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி உடல் கூர் ஆய்வுக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சவக்கடங்கில் உட்படுத்தி உள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் யாருக்கும் தெரியாமல் காருக்குள் போனதும் கார் டோர் சாத்திக் கொண்டு திறக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.