நாளை முதல் மின்சார ரயில்கள் ரத்து- கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டம்
நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை ஒட்டி, கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாம்பரம் ரயில் நிலையத்தில் 23.07.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 23.07.2024 முதல் 14.08.2024 வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் பல்லாவரம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு தற்போது 60 பேருந்துகள் மூலம் 571 பயண நடைகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பெரிய பேருந்துகளை மா.போ.கழக இயக்க உள்ளது. மற்றும் பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் shuttle service-ஆக இயக்க உள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.