×

சப்பாத்தியும் புரோட்டாவும் ஒன்றாக முடியுமா? ஜெயலலிதா தலைமையை சுட்டிக் காட்டி பூங்குன்றன் கருத்து..!

 

தமிழக அரசியல் வரலாற்றில் தனித்துவமான தடம் பதித்த தலைவர்கள் பலர் இருந்தாலும், வீழ்ந்த இடத்திலிருந்தே அதிவேகமாக மீண்டு வரும் ‘பீனிக்ஸ் பறவைக்கு’ முழு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா மட்டுமே. 1996-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அ.தி.மு.க மிகப்பெரிய சரிவை சந்தித்தபோதிலும், அவர் சோர்ந்து முடங்கிவிடவில்லை. தொண்டர்களைத் தட்டியெழுப்பி இயக்கத்தைக் கட்டுக்கோப்பாக மாற்றினார். இதன் விளைவாக, அடுத்த 10 ஆண்டுகள் வரை காத்திருக்காமல், வெறும் 2 ஆண்டுகளில் (1998-ல்) டெல்லி அரசியலைத் தீர்மானிக்கும் முதன்மைச் சக்தியாக அ.தி.மு.க.வை உயர்த்திக் காட்டினார்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தமிழக அரசியல் வரலாற்றில் தொடர்ந்து 2-வது முறையாக (2011, 2016) ஒரு கட்சியை அரியணையில் அமர்த்திக் காட்டிய பெருமை ஜெயலலிதாவுக்கே உரியது. 

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய முன்னாள் தனி உதவியாளரான பூங்குன்றன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு சுவாரசியமான ஒப்பீட்டுக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

“சப்பாத்தியும் புரோட்டாவும் பார்ப்பதற்கு ஒரே வடிவில் இருந்தாலும், அவற்றின் சுவையும் குணமும் தயாரிக்கும் விதமும் முற்றிலும் வேறுபட்டவை” எனக் குறிப்பிட்டுள்ளார். மைதாவால் செய்யப்படும் புரோட்டாவை எத்தனைக் கடைகளில் சாப்பிட்டாலும் அதன் அடிப்படைத் தன்மை மாறாதது போல, ஜெயலலிதா என்ற ஆளுமை கொண்ட தலைவருக்கு ஈடாக வேறு யாரையும் நிறுத்திப் பார்க்க முடியாது என்ற ஆழமான அரசியல் செய்தியை அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில், கட்சிக் கட்டுப்பாட்டையும் ஆட்சி அதிகாரத்தையும் எவ்வித சமரசமும் இன்றிப் பராமரித்த விதத்தை நினைவுகூர்ந்துள்ள அவர், “அம்மா இருந்தபோது இருந்த கம்பீரமும், அவர் எடுத்த அதிரடி முடிவுகளும், தொண்டர்கள் அவர் மீது வைத்திருந்த அசைக்க முடியாத விசுவாசமும் தனித்துவமானது. போலிகளைப் பார்த்து ஏமாந்து விடக்கூடாது; தலைவர்கள் என உரிமை கோருபவர்கள் அனைவரும் ஜெயலலிதாவுக்குச் சமமாகிவிட முடியாது” என்பதை உணர்த்தவே இந்த ஒப்பீட்டை மேற்கொண்டுள்ளதாகக் தெரிகிறது.

அதிமுக உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமைப் போட்டிகள் தொடர்ந்து நீடித்து வரும் தற்போதைய சூழலில், ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் மிக நெருக்கமாகப் பணியாற்றிய பூங்குன்றனின் இந்தப் பதிவு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தொண்டர்களிடையே ஜெயலலிதாவின் பழைய நினைவுகளை எழுப்புவதோடு மட்டுமல்லாமல், தற்போதைய தலைமைகளுக்கு ஒரு மறைமுக எச்சரிக்கையாகவும் அவரது பதிவு பார்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.