×

ஜன.16 பேருந்து முன்பதிவுக் கட்டணம் ரிட்டன் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு...

 


ஜனவரி 16 அன்று முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்து கட்டணங்கள் திருப்பி அளிக்கப்பம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக, நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் ஊர் திரும்ப வசதியாக 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது..  

அதன்படி ஜனவரி 16 அன்று வழக்கமாக இயங்கும் பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 4,130 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பேருந்துகளில் சென்னை திரும்ப மதுரை, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால்  வரும் ஞாயிறு ஜனவரி 16 அன்று முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் பொதுப்போக்குவரத்து இயங்காது.  எனவே ஜனவரி 16 அன்று முன்பதிவு செய்திருந்த பயணிகளின் கட்டணத்தை 2 தினங்களுக்குள் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது. மேலும் ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில்  16,709 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.