கட்டிட கான்ட்ராக்டர் காரை ஏற்றி படுகொலை! நாகர்கோவிலில் சோகம்
நாகர்கோவிலில் கட்டிட கான்ட்ராக்டர் காரை ஏற்றி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம்புதூர் பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார்.இவரது சகோதரர் விஜயகுமார்.கட்டிட காண்ட்ராக்டர்.தென்தாமரைகுளம் அருகே தெற்கு கரும்பாட்டூரை சேர்ந்தவர் விக்டர் ராஜதாஸ். டி.வி மெக்கானிக்கான இவர், நாகர்கோவில் செட்டிகுளம் ஜங்ஷனில் கடை வைத்துள்ளார். ஜெயகுமாருக்கும், விக்டர் ராஜதாசுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது.ஜெயகுமாருக்கு, விக்டர் ராஜதாஸ் 1 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.அந்த பணத்தை கேட்பதற்காக ஜெயக்குமார் நேற்று இரவு செட்டிகுளத்தில் உள்ள விக்டர் ராஜதாசின் கடைக்கு சென்றார். தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டிருக்கிறார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து ஜெயக்குமார் கூறுகையில், தனது சகோதரர் விஜயகுமாருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தார்.உடனே விஜயகுமார் செட்டிகுளம் பகுதியில் உள்ள விக்டர் ராஜதாசின் கடைக்கு வந்தார்.இதையடுத்து விக்டர் ராஜதாசிடம், விஜயகுமார் மற்றும் ஜெயகுமார் ஆகிய இருவரும் தட்டிக்கேட்டனர். அதில் ஆத்திரமடைந்த விக்டர்ராஜதாஸ், அங்கு நின்று கொண்டிருந்த தனது காரில் ஏறி ஜெயக்குமார் மற்றும் விஜயகுமார் மீது மோதுவது போல் வேகமாக ஓட்டிச் சென்றார். அதில் உஷாரான ஜெயகுமார் விலகிக்கொண்டார். ஆனால் விஜயகுமார் விலகி செல்வதற்குள்ளாக அவரின் மீது காரால் விக்டர் ராஜதாஸ் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட விஜயகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து விக்டர் ராஜதாஸ் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.காரால் மோதியதில் படுகாயமடைந்த விஜயகுமார் உயிருக்கு போராடிய நிலையில் அவரை அவரது சகோதரர் ஜெயகுமார் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு விஜயகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோட்டார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தனது சகோதரர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசில் ஜெயகுமார் புகார் அளித்ததன் பேரில் விக்டர் ராஜதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள விக்டர் ராஜதாசை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் காண்ட்ராக்டர் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.