#BREAKING : நாளை அரசுக்கு எதிராகவே வாக்களிப்போம் - அதிமுகவின் அதிரடி முடிவை அறிவித்தார் ஓ.எஸ். மணியன்..!
அதிமுகவின் 47 சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கே தங்கள் ஆதரவை அளித்துள்ளதாகவும், அவரே கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். இதற்கான ஆதரவு கடிதம் சபாநாயகரிடம் முறைப்படி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதிமுகவில் எவ்விதப் பிளவும் இல்லை என்றும், கட்சி ஒன்றாகவே இருப்பதாகவும் உறுதிபட கூறினார். மேலும், அதிகாரப் பதவி மற்றும் அமைச்சர் பதவிகளின் மீதான ஆசையால்தான் சிலர் மாற்று கருத்துகளை பேசி வருவதாக சாடினார்.
திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி இருப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மையில்லை என்று மறுத்த அவர், நாளை சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராகவே அதிமுக வாக்களிக்கும் என்று தெளிவுபடுத்தினார். கட்சியின் முடிவை மீறி தமிழக வெற்றிக் கழக அரசை ஆதரிப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். சட்டப்பேரவை கொறடாவை நியமிக்கும் அதிகாரம் கட்சித் தலைமைக்கே உள்ளது என்பதையும் தனது பேட்டியின் போது அவர் சுட்டிக்காட்டினார்.