#BREAKING :
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.15,000 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்..!
சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபடுவதற்காக எழும்பூர் காந்தி இர்வின் சாலைக்கு வெவ்வேறு பகுதிகளில் இருந்து தனித்தனி குழுக்களாக ஆசிரியர்கள் வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறும்போது, ‘எங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்கு எத்தனை நாட்கள், மாதங்கள் ஆனாலும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம். மக்களாட்சியில் போராட, கருத்து தெருவிக்க அனுமதி இல்லை. அரசு ஊழியர்களை அலைகழிப்பது ஜனநாயக படுகொலை. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லாமல் போராடுவோம்’ என்றனர். இதைபோல பகுதி நேர ஆசிரியர்களும் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.
* பொங்கல் பண்டிகை தினத்தில் ஆசிரியர்கள் போராடுவது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
* பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.
* பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.
* கடந்த 12 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை.
* மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.