×

#BREAKING : பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் காலமானார்..!

 

பிரபல இசை அமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் (70) சென்னையில் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மலையாளத் திரையுலகில் தனித்துவமான இசை பாணியால் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்தவர் எஸ்.பி. வெங்கடேஷ். தனது இசைப் பயணத்தை இசையமைப்பாளர்கள் சியாம் மற்றும் ரவீந்திரன் ஆகியோரின் உதவியாளராக தொடங்கினார். பின்னர், தம்பி கண்ணந்தானம் இயக்கிய மோகன்லால் நடித்த 'ராஜாவின்டே மகன்' படம் மூலம் மலையாளத்தில் இசை அமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார்.

மலையாளத்தில் பல வெற்றிப் பாடல்களை உருவாக்கியவர். 1990களில் ‘கிலுக்கம்’, ‘மின்னாரம்’, ‘ஸ்படிகம்’, ‘த்ருவம்’, ‘கௌரவவர்’, ‘ஜானி வாக்கர்’, ‘கிழக்கு பட்ட்ரோஸ்’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து, மலையாள சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தார்.1985-2000 காலகட்டத்தில் மலையாள சினிமாவில் பல வெற்றிப் பாடல்களை எஸ்.பி. வெங்கடேஷ் உருவாக்கினார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

மலையாளத்தில் இதுவரை 150 படங்களுக்கு இசையமைத்துள்ள எஸ்.பி. வெங்கடேஷ், தனது திரை வாழ்வில் தமிழ், கன்னடம், பெங்காலி, இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 500 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தம்பி கண்ணந்தானம் படங்களில் தான் அதிகளவில் இசை அமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். 

அவரது சிறப்பான இசைப் பங்களிப்புக்காக 1993 ஆம் ஆண்டு மாநில அரசின் “சிறந்த இசையமைப்பாளர்” விருது வழங்கப்பட்டது. அவரது இசை பல மொழித் திரையுலக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. அவரது மறைவு திரையுலகிற்கும், இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.