×

காதலிக்கு கால் வெயிட்டிங்கில் போனதால் கடுப்பான காதலன் நேரலையில் தற்கொலை

 

காதலியுடன் ஏற்பட்ட சிறு பிரச்சனைக்காக காதலிக்கு வீடியோ கால் மூலம் தற்கொலையை நேரலை  செய்து உயிரை விட்ட இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கீழத்தெருவை சேர்ந்த குமார் என்பவரின் 21 வயது மகன் ரஞ்சித், ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பிரசாத ஸ்டாலில் வேலை பார்த்து வந்தார். கோவிலுக்கு அருகில் அறை எடுத்து தங்கி இருந்த ரஞ்சித், கும்பகோணத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 
 
காதலியை செல்போனில் தொடர்பு கொள்ளும் போது கால் வெயிட்டிங் சென்றதால் இது குறித்து ரஞ்சித் தனது காதலியுடன் பிரச்சனை செய்துள்ளார்.  இதற்காக தனது கைகளை பல முறை பிளேடால் கீறி உள்ளார்.   இந்நிலையில் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் காதலியை  தொடர்பு  கொண்ட ரஞ்சித், தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி விட்டு அந்த காட்சியை நேரலை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்  ரஞ்சித் உடன் வேலை பார்த்து வரும் நண்பருக்க  இது குறித்து தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் அவரது நண்பர்  ரஞ்சித் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது ரஞ்சித் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு மாட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரஞ்சித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.