×

நடுவானில் உடைந்த போயிங் விமான ஜன்னல்! 20,000 அடி உயரத்தில் வெளியே இழுக்கப்பட்ட முதியவர்!

 

கிரீஸ் நகரில் இருந்து ஜெர்மனியின் மெம்மிங்கன் நோக்கி 230-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த ரயான்ஏர் (Ryanair) நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737-800 ரக விமானத்தில், நடுவானில் அரங்கேறிய ஒரு கோர விபத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்டு சுமார் 10 நிமிடங்களில், சுமார் 20,000 அடி உயரத்தில் பறந்தபோது அதன் எஞ்சினில் ஏற்பட்ட திடீர் செயலிழப்பு காரணமாக எஞ்சினின் ஒரு பகுதி உடைந்து சிதறியது. அவ்வாறு அதிவேகத்தில் தெறித்த எஞ்சின் பாகத்தின் இரும்புத் துண்டு ஒன்று, விமானத்தின் பயணிகள் அமரும் கேபின் ஜன்னலை (Cabin  Window) நோக்கி மிகக் கொடூரமாகத் தாக்கியதில் ஜன்னல் கண்ணாடி அடியோடு உடைந்து நொறுங்கியது.

விமானத்தின் ஜன்னல் உடைந்த அடுத்த நொடியே, கேபினுக்குள் இருந்த காற்று அழுத்தம் மிக வேகமாக வெளியேறியதால் (Rapid Decompression) பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டது. அந்த ஜன்னல் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த செர்பியா நாட்டைச் சேர்ந்த 61 வயதான முதியவர் ஒருவரின் தலை மற்றும் தோள்பட்டை வரை ஒட்டுமொத்த பாதி உடலும் உடைந்த ஜன்னல் வழியாக வான்வெளியில் வெளியே இழுக்கப்பட்டது. “திடீரென டயர் வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது, உடனடியாக ஆக்சிஜன் மாஸ்க்குகள் கீழே விழுந்தன; திரும்பிப் பார்த்தபோது ஒரு பயணியின் தலை முற்றிலும் விமானத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது” என்று சக பயணிகள் அந்த திகிலூட்டும் தருணத்தை விவரித்துள்ளனர்.

அந்த நரக வேளையில், அருகில் அமர்ந்திருந்த அவரது மனைவி துரிதமாகச் செயல்பட்டு, ஜன்னல் வழியே வெளியேறிக்கொண்டிருந்த தனது கணவரின் கால்களைப் பற்றிக் கொண்டு ஆவேசமாகக் கதறினார். அதிர்ஷ்டவசமாக அந்த முதியவர் சீட் பெல்ட் (Seat Belt) அணிந்திருந்ததாலும், அவரது மனைவியின் தைரியமான முயற்சியாலும் அவர் முழுமையாக வெளியே உறிஞ்சப்படுவது தடுக்கப்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த சக பயணிகளும், விமானப் பணியாளர்களும் கடுமையான காற்று வீச்சிற்கு மத்தியிலும் தங்களின் உயிரைப் பணையம் வைத்துப் போராடி, சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகு அந்த முதியவரைப் பாதுகாப்பாகப் பிடித்து மீண்டும் கேபினுக்குள் இழுத்தனர்.

இந்தக் கடுமையான விபத்தைத் தொடர்ந்து, விமானத்தின் கேப்டன் உடனடியாக ‘எமர்ஜென்சி’ பிரகடனம் செய்து, விமானத்தை மிக வேகமாகத் தரையிறக்கத் தொடங்கினார். தெசலோனிகி விமான நிலையத்தில் விமானம் அவசரமாகப் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதும், அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டனர். மைனஸ் டிகிரியில் வீசிய உறைபனி காற்றின் வேகம் காரணமாக அவரது கழுத்து மற்றும் உடலில் கடுமையான உராய்வுக் காயங்கள் (Friction Burns) ஏற்பட்டுள்ளதால், அவர் தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் கட்டமைப்புத் தோல்வி குறித்து ஐரோப்பிய ஒன்றிய வான்வழிப் பாதுகாப்பு முகமை (EASA) மற்றும் அமெரிக்க எஃப்ஏஏ (FAA) ஆகியவை இணைந்து தற்பொழுது உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளன.

😱 Horrifying! A passenger was partially sucked through a shattered plane window at an altitude of 6,000 metres

Shortly after a Ryanair flight from Thessaloniki to Germany took off, a fragment broke off the engine and smashed a window.

The 61-year-old man began to be pulled… pic.twitter.com/cax9KP96pY

— NEXTA (@nexta_tv) July 10, 2026