×

கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்திற்குச் சொந்தமான நிலம் மோசடி- வானதி சீனிவாசன் கண்டனம்

 

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்கள் அனைத்தையும் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்து இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கும் பட்சத்தில் உடனடியாக மீட்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற பத்திரப் பதிவு முறைகேட்டில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது மீண்டும் பழனி ஆயக்குடி பகுதியில் கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்திற்குச் சொந்தமான ரூ. 2 கோடி நிலத்தினை ரூ.9 லட்சத்திற்கு பத்திரப் பதிவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.மேலும் பழனி கோவில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி மடத்திற்குச் சொந்தமான நிலம் முறைகேடான பதிவு புகாரில் சிக்கிய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் என்பவர்தான் இந்நிலத்தினையும் பதிவு செய்ததாகக் கூறப்படுவது பேரதிர்ச்சி. 

இதுகுறித்து திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், பழனி பத்திரப் பதிவாளருக்கு குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள நிலத்தினை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியும் கடந்த மாதம் தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது பத்திரப் பதிவுத்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது. தற்போது அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு ஒரு நிலம் பதிவு செய்யப்படுகிறது என்றால் அது நிச்சயம் பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. 

இதுபோல் தொடர்ந்து கோவில் நிலங்கள் தனிநபர்களின் பெயரில் நிலமோசடி செய்யப்பட்டு அபகரிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. பத்திரப் பதிவுத் துறையில் வெளிப்படைத் தன்மை இல்லாததும்,  சாமானிய மக்கள் எளிதில் அறிந்து கொள்ளாத வகையில் சில நடைமுறைகள் பின்பற்றப்படுவதும் இதுபோன்ற முறைகேடான செயல்களுக்கு வழிவகுக்கிறது.   எனவே தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்கள் அனைத்தையும் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்து இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கும் பட்சத்தில் உடனடியாக மீட்க வேண்டும். மேலும் மடத்திற்குச் சொந்தமான நிலங்களும் தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து கோவில் மற்றும் மடங்களின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.