“கேசவ விநாயகம் மீது எந்த விமர்சனமும் இல்லை! யதார்த்தமாக மாற்றப்பட்டுள்ளார்... இதைவிட முக்கியமான பணிக்கு செல்கிறார்”- தமிழிசை
தமிழ்நாடு பாஜகவின் அமைப்புப் பொதுச் செயலராக சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்து வந்த கேசவ விநாயகன் பொறுப்பில் இருந்து விடுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சி சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் "தமிழக பாஜகவில் மேற்கொள்ளப்படும் கட்சி ரீதியான மாற்றங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நீண்டகால நடைமுறைப்படியே நடைபெறகிறது. இதில் எவ்வித உள்நோக்கமோ அல்லது விமர்சனமோ இல்லை. வருகின்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காக நிர்வாகிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். 72 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் தங்களது களப்பணிகளைத் தொடங்கிவிட்டனர். வேளச்சேரி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளில் ஒரு பொறுப்பிலிருந்து மற்றொரு பொறுப்பிற்கு மாற்றப்படுவது என்பது ஒரு சிஸ்டம் (System). இது இயல்பாக நடைபெறக்கூடிய ஒன்று. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து அரசியல் பணிக்கு வந்தவர்கள், மீண்டும் தங்களது தாய் அமைப்பிற்குச் சென்று பணிபுரிவது வழக்கம். இதில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. கேசவ விநாயகம் மீது எந்த விமர்சனமும் இல்லை. யதார்த்தமாக மாற்றப்பட்டுள்ளார். இதைவிட முக்கியமான பணிக்கு செல்கிறார். 11 ஆண்டுகாலமாக கட்சிக்காக உழைத்தவர்களின் பங்களிப்பை நாங்கள் எப்போதும் நன்றியுடன் நினைவுகூருவோம். எனவே, இது நிர்வாக ரீதியான மாற்றமே தவிர, இதில் வேறு அழுத்தம் எதுவும் இல்லை. மேலும் , தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கூட்டணி வேறுபாடு இன்றி ஒட்டுமொத்தமாக வெற்றி பெறுவதே எங்களது இலக்கு” என்று தெரிவித்தார்.