மனுநீதியில் மட்டுமல்ல சிலப்பதிகாரம், திருக்குறளிலும் பெண்கள் குறித்து கொச்சை பதிவு உள்ளது: பாஜக
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதாகட்சியின் மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், “அதிமுக கூட்டணியில்தான் இன்றளவும் பாஜக உள்ளது. தேர்தல் அறிவித்தவுடன் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டு, கூட்டணி வலுப்படுத்தப்படும்.
முருகன் என்றால் என் முகம்தான் மக்களின் நினைவுக்கு வரும் என சீமான் தெரிவித்திருப்பது சிரிப்பாக உள்ளது. சீமான் சர்க்கஸ் பபூன் போன்றவர். புழக்கத்தில் இல்லாத மனுநீதியை வைத்துக்கொண்டு திருமா அரசியல் செய்கிறார், சிலப்பதிகாரம், திருக்குறளும் கூட பெண்களை கொச்சையாக பதிவு செய்துள்ளது. அதற்காக தமிழர் இலக்கியங்களை கொளுத்த முடியுமா? கமலஹாசனின் கனவில் பெரியார் வந்து, நீங்கள்தான் தமிழக முதல்வர் என்று கூறியுள்ளார் போல அவர் முதல்வர் கனவில் மிதக்கிறார்.
நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஜகவின் அறிவிக்கப்படாத விளம்பரதாரர்களாக செயல்பட்டு, பாரதிய ஜனதா கட்சியை வளர்த்துவருகின்றனர். தேவர் குருபூஜையில், திமுக தலைவர் ஸ்டாலின் திருநீரை அவமதித்ததற்கான விளைவை சந்திப்பார்/ கொடைக்கானலில் இ பாஸ் முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், வனத்துறை சுற்றுலா தங்கள், படகு சவாரி உள்ளிட்டவைகளை விரைவில் திறக்கவும், பூட்டி முத்திரையிடப்பட்ட விடுதிகளை திறக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.