×

கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்ற அரசு, ஆற்றில் உயிரிழந்தவர்களுக்கு பொறுப்பேற்காதது ஏன்?- பாஜக

 

கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்ற அரசு, ஆற்றில் உயிரிழந்தவர்களுக்கு பொறுப்பேற்காதது ஏன்? என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், “கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பங்களுக்கு பத்து லட்சம் வழங்கிய தமிழக அரசு,  ஸ்ரீரங்கம்  கொள்ளிடம் ஆற்றில் மூன்று சிறுவர்கள் அதிகாலை குளிக்கச் சென்ற போது மூழ்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்க கூட முன் வராதது ஏன்? முன் அறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தான் அந்த சிறுவர்கள் உயிரிழந்ததற்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கே  காரணம்.  தமிழக அரசே இத‌ற்கு பொறுப்பு.



இளம் சிறுவர்களை இழந்து வாடும் அந்த குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று பத்து லட்சம் வழங்கிய அரசு,  தனது தவறுக்கு பொறுப்பேற்று மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்.  முறையான அறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்து விட்ட அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யபட்டு கைது செய்யப்பட வேண்டும்.  அப்படி செய்வதன் மூலம் மட்டுமே இனி கடமையை உணர்ந்து அரசு அதிகாரிகள் பணியாற்றுவார்கள். ஆறாக ஓடிய கள்ளச்சாராய தண்ணியில் உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்சம்,  காவேரி தண்ணீரில் அரசின் மெத்தனப் போக்கால் உயிரிழந்தவர்களுக்கு பாரா முகமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.