×

விஜயின் சொகுசுக்காக ரூ.6 கோடியை வீணடிப்பதா?- நயினார் நாகேந்திரன்

 

தலைமைச் செயலக கோட்டையில் ஏற்கனவே போதிய வசதிகள் இருக்கும்போது, சொகுசுக்காகவும், தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் முதல்வர் அலுவலகத்தை மாற்ற ரூ. 6 கோடிக்கு மேல் செலவிடுவது எந்த விதத்தில் நியாயம்? என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “மாற்றம் தருவேன், புதிய அரசியல் செய்வேன்" என்று கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் திரு. விஜய் அவர்களின் சாயம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வெளியாகியுள்ள தகவலின் மூலம் குறுகிய காலத்திலேயே வெளுத்துப் போய்விட்டது. தமிழக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், அடிப்படைத் தேவைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தனது சொகுசுக்காகவும்,  தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மக்கள் வரிப்பணமான ரூ. 6.17 கோடியை தனது அலுவலகத்தை 10 - வது தளத்திற்கு மாற்றுவதற்காக வாரி இறைப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒருபுறம் ரூ. 1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவித்துவிட்டு, மறுபுறம் தற்காலிகமாக அலுவலகத்தை மாற்ற இத்தனை கோடி ரூபாயை விரயம் செய்வது ஏன்?

தலைமைச் செயலக கோட்டையில் ஏற்கனவே போதிய வசதிகள் இருக்கும்போது, சொகுசுக்காகவும், தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் முதல்வர் அலுவலகத்தை மாற்ற ரூ. 6 கோடிக்கு மேல் செலவிடுவது எந்த விதத்தில் நியாயம்? விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மணிகளைப் பாதுகாக்கச் சரியான சேமிப்புக் கிடங்குகள் இன்றி, அவை மழையில் நனைந்து வீணாகி வருவதாகக் குமுறி வரும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையைத் தற்காலிக அலுவலகத்திற்காக செலவிட முதல்வருக்கு மனசாட்சி உறுத்தவில்லையா? "மாற்றம்" என்பது மக்களின் வாழ்வில் மலர வேண்டுமே தவிர, முதல்வரின் அலுவலகச் சுவர்களில் அல்ல. எனவே, இது போன்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, அந்த நிதியைத் தமிழக மக்களின் நலன் காக்கும் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.