×

“தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை... பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைக்கிறாரோ?”- நயினார் நாகேந்திரன்

 

த.வெ.கவில் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. விஜய் பணத்தை வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைக்கிறாரோ? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ நிகழ்ச்சிக்காக பட்டுக்கோட்டைக்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆதவ்அர்ஜுனா தவெகவிற்கும், திமுகவிற்கும் இடையேதான் போட்டி என்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதிலளித்த நயினார் நாகேந்திரன், இது விந்தையிலும் விந்தையான விஷயம். ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. ஆதவ் அர்ஜுனா பணத்தை வைத்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைக்கிறாரோ என்பது தெரியவில்லை. ஒரு கவுன்சிலர் கூட அங்கு இல்லை. தேர்தல் வருவதால் கூட்டத்தை கூட்டி விடலாம். ஆனால் ஆட்சிக்கு வரவேண்டும். மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். எம்.எல்.ஏக்கள் வர வேண்டும். பிஜேபியில் மொத்தம் 300 எம்.பிக்கள் உள்ளனர். 1,200 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். உலகத்திலேயே ஒரு மிகப்பெரிய கட்சி பிஜேபி. ஆனால் அந்த கட்சி என்று இரு கையையும் விரித்தார். 

தொடர்ந்து பேசிய பாஜக நயினார் நாகேந்திரன், “பாஜக தீவிரமாக யாரையும் எதிர்க்காது. கொள்கை ரீதியாகவே எதிர்க்கிறது. கரூர் விவகாரத்தில் விஜய் என்றில்லை, யாராக இருந்தாலும் தனிநபரை தாக்கி பேச பாஜக ஆதரவு தராது. என்னுடைய பதவி எண்ணப்படுவதாக சேகர்பாபு கூறுகிறார். எனக்காவது 2.5 வருடங்கள் இருக்கின்றன. ஆனால் சேகர்பாபுக்கு இன்னும் 2.5 மாதங்கள்தான். NDA கூட்டணி நல்லாட்சி தருகின்ற கூட்டணியாக வரும் தேர்தலில் வெல்லும். தொகுதிக்கு 10,000 முதல் 15,000 வரை  கள்ள ஓட்டுகள் நீக்கப்பட்டவுடன், NDA ஆட்சி உறுதி, சந்தேகமே இல்லை. அனைத்து தொகுதிகளிலும் கள்ள ஓட்டுக்களை சேர்த்திருக்கிறார்கள்” என்றார்.