×

தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி வழங்க பாஜகவால் தான் முடியும்- கே.பி.ராமலிங்கம்

 

தமிழகத்தில் பாஜக ஆட்சியை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம், “தொடர்ந்து பாஜகவில் இருந்து பலர் விலகி அதிமுகவில் சேர்ந்துவருகின்றனர். ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது என்பது இயல்பான ஒன்றுதான். அதிமுகவில் இருந்து வந்த பலருக்கு பாஜகவில் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி வழங்க பாஜகவால் தான் முடியும்.

8 ஆண்டுகளாக எந்த வித ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, தமிழகத்தில் நல்லாட்சியை வழங்கும். அதனால் தமிழகத்தில் பாஜக ஆட்சியை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். திமுக ஆட்சியை கலைப்பதற்கு சதி நடப்பதாக தமிழக முதலமைச்சரே தெரிவித்துள்ளார். இதன்மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலுக்கும் தயாராகிவிட்டார் என்பது தெரிகிறது.  ஆகவே முதலமைச்சர் ராஜினாமா செய்து விட்டு 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அந்த தேர்தலிலேயே பாஜக ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. 

அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்பது எங்களது இலக்கு. மேலும் எங்களது லட்சியம் திமுக அரசியல் அங்கத்தில் இருந்து தூக்கி எரியப்பட வேண்டும். அதற்கு எது சரியாக அமையுமோ அதை பாஜக செய்யும்” என தெரிவித்தார்.