×

#BIG NEWS : தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த வார இறுதியில் வெளியாக வாய்ப்பு..!

 

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதிதான் நடந்தது. கொரோனா காலம் என்பதால், அப்போது முன்கூட்டியே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை வெயிலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தலாமா? என்று தேர்தல் ஆணையம் யோசித்து வருகிறது. ஏற்கனவே, 5 மாநில தேர்தல்களை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் கடைசி கட்டமாக தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.


இந்த நிலையில், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட குழு 3 நாட்கள் பயணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்தது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்து மாநிலத்தேர்தல் ஆணையர் மற்றும் அனைத்து கட்சி முக்கிய பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் காவல்துறையுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் சென்னையில் இந்திய தேர்தல் கமிஷன் தலைவர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு கூட்டங்களை நடத்தியது.


இந்நிலையில் அடுத்த வார இறுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் தனது குழுவுடன் வரும் 5ம் தேதி கேரளா சென்று 3 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார். மார்ச் 9, 10ஆம் தேதிகளில் மேற்கு வங்காளம் சென்று சட்டமன்றத் தேர்தல் பணிகளை ஆய்வு செய்கின்றனர். பத்தாம் தேதிக்கு பின்பு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.