#BIG NEWS : செப். 1ம் தேதி முதல் புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் செய்யப்படாது..!
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படாது எனத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிடுவோம் என திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உத்தரவாதக் கடிதம் தந்தால் மட்டுமே படம் ரிலீஸ் செய்யப்படும் எனவும், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 8 வாரங்களுக்கு பின்னரே ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பல்வேறு மாதங்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். 8 வாரங்களுக்கு பின்பே திரையரங்குகளில் வெளியாகும் படத்தை ஓடிடியில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர்களிடம் கடிதம் பெற்ற பின்னரே படங்களை திரையரங்குகளில் வெளியிடுவோம் என விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்திருந்தது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தினரை கலந்தாலோசிக்காமல் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது என்றும் இதனை கண்டிக்கும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இணைந்து வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என்றும் தற்போது இடைக்கால படப்பிடிப்பில் இருக்கும் படங்களின் பணிகளையும் நிறுத்துவாக அறிவித்துள்ளது.
தமிழில் ஆண்டுக்கு 250 படங்களுக்கும் மேல் வெளியாகி வரும் நிலையில் ஒரு சில படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றிபெறுகின்றன. பெரும்பான்மையான படங்கள் தோல்வியை சந்திக்கும் நிலையில் தயாரிப்பாளர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 200 கோடி அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பி எடுக்க ஓடிடி நிறுவனங்களையே சார்ந்திருக்கின்றன. இதனால் 8 வாரங்களுக்கு பின்பே திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கையை தயாரிப்பாளர்கள் சங்கங்கள் ஏற்க மறுத்துள்ளன.