#BIG NEWS : NCERT 8-ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்திற்குத் தடை - மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் : உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
என்.சி.இ.ஆர்.டி., வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்பது தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம், உச்சநீதிமன்றத்தில் இன்று எதிரொலித்தது.
இன்று நீதிமன்றம் கூடியதும், தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் மூத்த வக்கீல் கபில் சிபல் புகார் எழுப்பினார். 'நீதித்துறையில் நடக்கும் ஊழல்கள் பற்றி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என்று கபில் சிபல் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது:நீதித்துறைக்கு யாரும் களங்கம் கற்பிப்பிதை நான் அனுமதிக்க மாட்டேன்.இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் நான் என் கடமையை செய்கிறேன். இது ஒரு திட்டமிட்ட செயல் என தோன்றுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியும். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தன் கடும் அதிருப்தியை பதிவு செய்வதாக கூறிய தலைமை நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். இந்த மனு மீது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து NCERT மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "8ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நீதித்துறையை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) புதிய பாடம் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கு 2வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சர்ச்சைக்குரிய பாடம் இடம்பெற்றிருந்த என்சிஇஆர்டியின் 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்தச் சர்ச்சைக்குரிய புத்தகம் தொடர்பாக, என்சிஇஆர்டி கவுன்சில் தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரித்தனர்.
இந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். வழக்கு விசாரணையின் போது அவர், "இந்த விவகாரத்தில் நாங்கள் தீவிர விசாரணை நடத்தச் செய்ய விரும்புகிறோம். நீதித்துறையின் தலைவராக இதற்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது கடமை.. சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மன்னிப்பு கேட்டாலும் இந்த விவகாரத்தில் யார் பொறுப்பு என்பதைக் கண்டறியும் வரை நான் இந்த வழக்கை முடிக்க மாட்டேன். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறோம். நீதித்துறை ஊழல் நிறைந்தது என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியச் சமூகத்திற்கு நீங்கள் கற்பித்தால், சமூகத்தில் என்ன மாதிராயன தகவல் பரவும் என நினைக்கிறீர்கள்" என்று தங்கள் கவலைகளைப் பதிவு செய்தனர்.
புத்தகம் திரும்பப் பெறப்பட்டதாக மத்திய அரசு கூறிய போதும், அது சந்தைகளிலும் இன்னும் கிடைப்பதாகவும் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து பரவி வருவதையும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.சர்ச்சைக்குரிய அத்தியாயம் கொண்ட அனைத்துப் புத்தகப் பிரதிகளையும் உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும்" என்றார்.