பாக்யராஜின் கடைசி ஆசை.. நிறைவேற்றிய கவிஞர் வைரமுத்து..!!
நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியரான கே. பாக்யராஜ், கடந்த மாதம் 27-ஆம் தேதி சென்னையில் தனது 73-ஆவது வயதில் காலமானார். மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாக்யராஜ் தனது மறைவுக்கு முன், தனது சுயசரிதை நூலுக்கு முன்னுரை எழுதித் தருமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். ஆனால், அந்த முன்னுரையை எழுதி முடிப்பதற்குள் பாக்யராஜ் காலமானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, பாக்யராஜின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சுயசரிதைக்கான முன்னுரையை எழுதி, அவரது மனைவி பூர்ணிமாவிடம் நேரில் சென்று வழங்கியதாக வைரமுத்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
17.06.2026 அன்று
‘படிச்சாப் புடிச்சிர்லாம்’ என்ற
தன் சுயசரிதை நூலை
எனக்குத் தந்தனுப்பி
'முன்னுரை எழுதிக்கொடுங்கள்'
என்று பாசத்தோடு கேட்டார்
பாக்யராஜ்
‘கொஞ்சம் அவகாசம்
கொடுங்கள்’ என்றேன்
‘சரி’ என்றார்
27.06.2026 அன்று
அவர் மறைவுற்றார் என்றசெய்தி
என்னை நிலைகுலைய வைத்தது
அதன்பிறகு
நூலைப் படிக்கப் படிக்க
அவர்பட்ட
துயரங்களும், ரணங்களும்
அவமானங்களும், வறுமையும்
என்னை வாட்டி எடுத்தன
உணர்ச்சியுள்ள ஒரு முன்னுரை
எழுதி முடித்தேன்
பிறிதொரு
சந்தர்ப்பமாய் இருந்திருந்தால்
முன்னுரையை
மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன்
ஆனால், இந்தச் சூழ்நிலையில்
நேரில் சென்று
அவர் மனைவியிடம்
ஒப்படைப்பதே
மரியாதை என்று நினைத்தேன்
நேற்று மாலை
அவர் இல்லம் சென்று
திருமதி. பூர்ணிமாவிடம்
முன்னுரையை வழங்கினேன்;
தம்பி சாந்தனு உடனிருந்தார்
எவர் வெளியிட்டாலும்
உடனே வெளியிடுங்கள்;
உயிர்த்துடிப்புள்ள
புத்தகம் இது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.