மக்களே உஷார்..! ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 6 மாதம் சிறை தண்டனை..!
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, ரயிலில் பட்டாசுகளை எடுத்துச்செல்வதை தடுக்க தீவிர சோதனை விரைவில் தொடங்க உள்ளது. ரயிலில் பட்டாசு எடுத்துச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்பிஎஃப் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஆர்பிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட தீவிபத்து ஏற்படுத்தும் பொருட்களை கொண்டு செல்லத் தடை உள்ளது. சிலர் பண்டிகைக் காலங்களில் விதிமுறைகளை மீறி பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து வருகின்றனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
எனவே தடையை மீறி பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் முறையாகப் பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரயில்களின் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். எனவே பயணிகள் தங்களின் பாதுகாப்பையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரயில்வே சட்ட திட்டங்களை கடைப்பிடிக்கும்படி ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.