பெற்றோர்களே... தேர்வு முடிவை விட தேர்தல் முடிவுக்கு எச்சரிக்கையாக இருங்கள்!
தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் குழந்தைகளை உடன் வைத்திருங்கள். அன்று அவர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அவர்கள் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் அவர்களை ஆற்றுப்படுத்துங்கள் என பெற்றோர்களுக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளிவரும் நாட்களில் குழந்தைகளுடன் இருங்கள். தவறான முடிவுகள் எடுக்கும் நிலைக்கு சில குழந்தைகள் தள்ளப்பட்டு விடுகிறார்கள். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், சிறுவர்களை பயன்படுத்தி மனரீதியாக தூண்டுதல் செய்து அதன் மூலம் தேர்தலை எதிர்கொள்ள பிரசாரங்கள் நடைபெற்றிருப்பதாக புகார்கள் வருகின்றன. தேர்தல் முடிவுகள் மற்றும் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்த படி அமையவில்லை எனில் தவறான முடிவுகளை கையாளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். அவர்களை பாதுகாப்பது நமது கடமை. ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாய் இருந்திட பெற்றோர்களே மிகவும் கவனமுடன் செயல்படுங்கள். உதவிகள் தேவைப்பட்டால் குழந்தை பாதுகாப்பு இலவச எண்ணான 1098-ஐ உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.