×

தாயிடமிருந்து ரூ.85,000-க்கு குழந்தையை வாங்கி ரூ.3 லட்சத்துக்கு விற்ற தரகர்

 

செங்குன்றத்தில் குழந்தையை விலைக்கு விற்ற தாய், பெண் தரகர் உள்ளிட்ட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு குழந்தைகளை ஆந்திராவில் விற்பனை செய்துவருவது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் ஆந்திர மாநிலம் புத்தூரில் ஆய்வு செய்தபோது சென்னையில் இருந்து ஒரு குழந்தையை 3லட்ச ரூபாய்க்கு வாங்கி வந்து வளர்த்தது வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து குழந்தைகள் நல அதிகாரி  லலிதா செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

இந்த புகாரின் பேரில் ஆந்திராவில் விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்ட காவல்துறையினர், சென்னையில் உள்ள காப்பகத்தில் பாதுகாப்பாக சேர்த்தனர். செங்குன்றம் காவல்துறையினர் ஆந்திராவில் குழந்தையை வாங்கி வளர்த்து வந்த நவநீதம் என்ற பெண்ணை கைது செய்து நடத்திய விசாரணையில், சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த விஜயலக்ஷ்மி என்பவர், தனது 10 மாத ஆண் குழந்தை நித்தின்ராஜை, கடந்தாண்டு ஜூலை மாதம் விற்றது தெரியவந்தது. குழந்தையை பெண் தரகர்  தங்கம் என்பவர் மூலமாக 85ஆயிரம் ரூபாய்க்கு விஜயலட்சுமி விற்க, அதனை பெண் தரகர் 3லட்ச ரூபாய்க்கு ஆந்திராவில் பிடிபட்ட நவநீதம் என்பவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து குழந்தையை விற்பனை செய்த தாய் விஜயலக்ஷ்மி (30), பெண் தரகர் தங்கம் (42), குழந்தையை வாங்கிய நவநீதம் (69) ஆகிய மூவரை செங்குன்றம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள  மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குழந்தையை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட 3பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.