ஆடி மாதத்தில் வரும் நல்ல நாட்கள் : கொண்டாடப்படும் சில முக்கியமான பண்டிகைகள்..!
ஆடிப்பிறப்பு: ஆடி மாதத்தின் முதல் நாள் ஆடிப் பண்டிகை அல்லது ஆடிப்பிறப்பு என்று கொண்டாடப்படுகின்றது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், இலங்கையிலும், ஈழத் தமிழர்களுக்கு மத்தியில் ஆடிப்பிறப்பு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
வரலட்சுமி அம்மன் விரதம்: லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான பூஜைகளில் ஒன்றான வரலட்சுமி பூஜை ஆடி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை செய்யப்படுகிறது. இந்த நாளில் வரலட்சுமி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு பிரசாதங்கள் அளிக்கப்ப்டுகின்றன.
ஆடிப்பெருக்கு: ஆடிப்பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கப்படும் இந்த விழா ஆடி மாதத்தின் 18 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. நல்ல மழைக்கும், வளமான பயிருக்கும், செழிப்பான விளைச்சலுக்கும் மக்கள் கடவுளை வேண்டும் நாளாகும் இது. பருவமழை காரணமாக பொதுவாக, இந்த காலத்தில் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீரைக் காணவும், வணங்கவும் மக்கள் ஆற்றங்கரைக்கு வந்து படையல் இடுவது வழக்கம். சொந்தங்களுடனும் நண்பர்களுடனும் ஆற்றங்கரையிலேயே உணவுண்டு பேசி மகிழும் நாளாகும் இது.
ஆடிப்பூரம்: ஆடிப்பூரம் ஆண்டாள் நாச்சியாரின் பிறந்த நட்சத்திரத்தைக் குறிக்கும் திருவிழாவாகும். இந்நாளில் சூடிக் கொடுத்த சுடர்கொடி கோதைக்கு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெண்களுக்கு வளையல்கள் வழங்கப்படுகின்றன.
ஆடிக்கிருத்திகை: ஆடிக்கிருத்திகை தமிழ்க் கடவுள் முருகனுக்கு உகந்த நாளாகும். முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் முருகனுக்கு விரதமிருந்து வணங்குவோரை எந்த வினையும் அண்டாது.
புத்துக்கு பால்: ஆடி மாதம் வரும் நாக பஞ்சமியில் மக்கள் புற்றுகளில் உள்ள பாம்புகளுக்கு பால் ஊற்றுவது வழக்கம். பாம்புகளை கடவுளின் பிரதிநிதியாகப் பார்க்கும் நம் கலாச்சாரத்தில் இது மிகுந்த முக்கியத்துவத்தைப் பெருகிறது. சிலர் பாம்பின் சிலைகளுக்கு பால் அபிஷேகமும் செய்கிறார்கள். பால் ஊற்றி அபிஷேகம் செய்வதால் நாக தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆடி மாதத்தில் நாமும் இறைபக்தியுடன் நல்ல காரியங்களில் ஈடுபட்டு இறையருள் பெறுவோம்!!