×

சாலையில் அனாதையாக கிடந்த அசாம் பயணியின் உடல் - சென்னையில் அதிர்ச்சி!

 

சென்னை பல்லவரத்தில் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்துவந்தவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் பால். இரண்டு வருடங்களுக்கு மேலாக சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இச்சூழலில் நேற்று தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக சென்னையிலிருந்து கவுகாத்திக்கு மதியம் 3:55க்கு கிளம்பும் விமானத்தில் முன்பதிவு செய்துள்ளார். நேற்று காத்திருப்போர் அறையில் தீபக் பால் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென்று உடல் வலிப்பு ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள் தீபக்கை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நலம் தேறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் இன்று காலை வேறொரு விமானத்தில் கவுகாத்தி செல்லும் வகையில் விமான நிலைய நிர்வாகம் ஏற்பாடு செய்தது. ஆனால் தீபக் பாலுக்கு மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பாதி வழியிலேயே உயிரிழந்தார்.

அதற்குப் பின் அவரது உடல் மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் அவரது உடலை முறைப்படி மூடாமல், தீபக்கின் உடல் சென்னை உள் நாட்டு விமான முனையத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் போடப்பட்டிருந்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தீபக்கின் உடல் மழையில் நனைந்தபடி சாலையின் ஓரத்தில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்குப் பின் மீனம்பாக்கம் காவல்துறையினர் உடலை மீட்டு பல்லாவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.