×

சக மாணவருக்கு சிறுநீரை குடிக்க சொல்லி டார்ச்சர் கொடுத்த மாணவர்கள்! 

 

திருச்சி தேசிய சட்ட பள்ளியில் பயிலும்  மாணவருக்கு சக மாணவர்கள் சிறுநீர் கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் தேசிய சட்ட பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சட்டம் பயின்று வருகின்றனர். இப்பள்ளி 2012-2013 கல்வி ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவர் ஒருவருக்கு கடந்த 6-ம் தேதி அவரது வகுப்புத் தோழர்கள் இருவர் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை, மறுநாள் வகுப்பறையில் கூறி அந்த மாணவரை இரு மாணவர்களும் கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவர் பதிவாளரிடம் வாய்மொழியாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 3 உதவி பேராசிரியர்கள் தலைமையில் அந்த மாணவருக்கு உண்மையிலேயே சிறுநீர் கலந்த பானம் கொடுக்கப்பட்டதா? புகாரின் உண்மை தன்மை என்ன என்பது குறித்தும், விசாரணை நடத்தி வரும் 18ஆம் தேதி அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.

குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால் மாணவர்கள் இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் காவல்துறை வாயிலாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சட்டப்பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.