×

அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் தற்காலிகமாக சேவை நிறுத்தம்!! 
 

 

அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தின் மேற்கூரையில் அவசர பராமரிப்பு பணி காரணமாக பச்சை வழித்தடத்தில் 3 மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு தற்காலிகமாக மெட்ரோ இரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , பச்சை வழித்தடத்தில், அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேற்கூரையில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (29.11.2023) மதியம் 1:45 மணி முதல் 2.15 மணி வரை வடபழனி, அரும்பாக்கம் மற்றும் புரட்சித்தலைவி டாக்டர். ஜெ.ஜெயலலிதா புறநகர்ப் பேருந்து நிலைய மெட்ரோ இரயில் நிலையங்களில் தற்காலிகமாக மெட்ரோ இரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பச்சை வழித்தடத்தில், புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து கீழ்ப்பாக்கம், அண்ணா நகர் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ இரயில் சேவைகள் தற்காலிகமாக கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலையம் வரை இயக்கப்படும். அதேபோல், பரங்கி மலை மற்றும் விமான நிலையம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து சென்ட்ரல் செல்லும் மெட்ரோ இரயில் சேவை தற்காலிகமாக அசோக் நகர் மெட்ரோ இரயில் நிலையம் வரை இயக்கப்படும்.