பிரபல நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பிடிவாரன்ட்..!
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜுக்கு, பெங்களூரு நீதிமன்றம், 'பிடிவாரன்ட்' பிறப்பித்துள்ளது.
அரசியலமைப்பு சட்டப்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளின் வாக்காளராக பதிவு செய்வது சட்டவிரோதம்; மிகப்பெரிய குற்றம். ஒருவர் குறிப்பிட்ட மாநிலத்தின் ஒரு தொகுதியின் வாக்காளராகவே இருக்க முடியும்.
தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் வாக்காளராக பதிவு செய்து, அந்த மாநிலங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளையும் வைத்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இது குறித்து, வழக்கறிஞர் திலீப் குமார் என்பவர், 2019ல் பெங்களூரின் ஹலசூரு கேட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லாததால், நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அதன்பின், தேர்தல் கமிஷனில் புகார் அளித்தார். அங்கும் நடவடிக்கை எடுக்காததால், பெங்களூரின், 48வது கூடுதல் ஏ.சி., - ஜெ.எம்., நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதை ஏற்ற நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகும்படி, பிரகாஷ் ராஜுக்கு இரண்டு முறை, 'சம்மன்' அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அவர் எந்நேரத்திலும் கைதாகலாம் என, தெரிகிறது.