×

மருத்துவக் காரணத்திற்காக ரூ.50,000 எடுத்து செல்லலாம்... வாட்ஸ்அப் ஆதாரம் போதும்: அர்ச்சனா பட்நாயக்

 

மருத்துவ காரணங்களுக்காக ரூ.50,000 பணத்தை கொண்டு சென்றால் வாட் அப்பில் கூட ஆவணங்களை காட்டலாம் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டியளித்துள்ளார்.

ஒன்றிய அரசின் பத்திரிக்கை தகவல் அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கையேட்டை தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், “சமூக வலைதளங்களில் பிரசாரம்,வெறுப்பு பேச்சு ஆகியவைகளை சைபர் காவல் துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 50,000 என்ற தொகையை உயர்த்த  வேண்டும் என்று பல்வேறு வணிகர் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் எங்களிடம் கோரிக்கை  வைத்துள்ளனர். இது தொடர்பான கோரிக்கை மனுக்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்


மருத்துவ காரணங்களுக்காக பணத்தை எடுத்துச் சென்றால் அது தொடர்பான ஆவணங்களை வாட்ஸ் அப்பில் கூட காட்டினால் போதும் என்று தெரிவித்துள்ளோம். பொதுமக்களை  தொந்தரவு செய்யக்கூடாது என பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இயல்பாக கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு இன்னும் பத்து நாட்களில் வண்ணப் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்” என்றார்.