உடனே அப்ளை பண்ணுங்க... 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவி தொகை..!!
2023-2024-ஆம் கல்வியாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான தேர்வு ஜனவரி 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் (இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்வியாண்டுக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என வழங்கப்படும்.
தமிழக அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரண்டு தாள்களாக இத்தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம்பெறும். முதல் தாளில் கணிதமும், 2-ஆம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும்.
தேர்வின் முதல்தாள் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையும், இரண்டாம்தாள் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரையும் நடைபெறும். மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், வியா ழக்கிழமை (டிச.18) முதல் டிச.26 வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.