#BREAKING முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா
முதலமைச்சர் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த அன்வர் ராஜா அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம் பியுமான அன்வர் ராஜா, அதிமுக - பாஜக கூட்டணி அமைத்ததால் அதிருப்தியில் இருந்து வந்தார். ஏற்கனவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்த போதும் அக்காட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த அன்வர் ராஜா, சி ஏ ஏ சட்ட திருத்தத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தபோதும், நாடாளுமன்றத்தில் எதிர்த்து பேசி இருந்தார். இந்த நிலையில், அண்மையில் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த போது, தமிழ்நாட்டில் ஒருபோதும் பாஜக கால் ஊன்ற முடியாது என அவர் தெரிவித்திருந்தார். அவரது பேட்டி அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து வெளியேறிய அன்வர் ராஜா, இன்று தன்னை திமுகவில் இணைத்துக்கொள்வதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். அவருக்கு திமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதுதொடர்பாக அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போதே, அவர் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்.