தவெக அரசுக்கு அண்ணாமலை விடுத்துள்ள முதல் 'அக்னிப் பரீட்சை'! - சி.பி.ஐ. விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:
தமிழகத்தில் 397 கோடி ரூபாய் மதிப்பிலான டிரான்ஸ்பார்மர் ஊழல் தொடர்பான அனைத்து முக்கிய கோப்புகளையும், சி.பி.ஐ.,யிடம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அரசு நிறுவனமான மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது?
அந்த மேல்முறையீடு, முந்தைய அரசால் தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றி கழக அரசுக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதா..? சி.பி.ஐ., விசாரணையை தடுக்க, அரசு நிறுவனத்தின் வாயிலாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடுகளை உடனே திரும்ப பெற, த.வெ.க., அரசு தலையிட வேண்டும்.
த.வெ.க., அரசுக்கு உண்மையிலேயே தனது ஊழல் எதிர்ப்பு வாக்குறுதியில் உறுதியாக இருக்கிறது எனில், முந்தைய தி.மு.க., அரசு திரும்ப பெற்ற, சி.பி.ஐ., விசாரணைகளுக்கான பொது ஒப்புதலை மீண்டும் வழங்க வேண்டும்.மேலும், முன்னாள் அமைச்சர் நேரு தொடர்பான வழக்குகள் உட்பட, பல ஊழல் புகார்களில் லஞ்ச ஒழிப்பு துறை இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், நிலுவையில் வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.