பீகாரின் பல மாவட்டங்களை விட, தருமபுரி பின்தங்கியுள்ளது - அண்ணாமலை ட்வீட்!!
தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார். தருமபுரி மக்களை தேசிய அளவில் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பக்கத்தில், நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், ஆயிரம் ஆண்டு கால வரலாற்றை சுமந்து நிற்கும் வர்ணீஸ்வரர் கோவில், தென்பெண்ணை ஆற்றங்கரை வேடியப்பன் சுவாமி, மேலும் புகழ்பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் குடி கொண்டிருக்கும் தீர்த்தமலை அமைந்திருக்கும் தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதியில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற ஆர்வத்தோடு கூடியிருந்த பொதுமக்கள் அன்பால் சிறப்புற்றது. தமிழகத்திற்கும் ராமருக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லும் அரசியல்வாதிகள் இங்கே தீர்த்தமலை கோவிலுக்கு வர வேண்டும். ராமபிரான் சிவபெருமானை இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேஸ்வரம், மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்தகிரி. ராமபிரானை வேண்டிக்கொண்டு இங்குள்ள தீர்த்தக் குளத்தில் ராமஜெயம் என்று சொல்லி நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அயோத்தி ராமர் கோவிலில் ஜனவரி 22 அன்று நடக்கவிருக்கும் கும்பாபிஷேகம், ராமர் வழிபட்ட அரூர் கோவிலுக்கும் நடப்பதாகத்தான் பொருள்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் கடந்த ஒன்பதாண்டு கால ஆட்சி, ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்துக்காகக் கொண்டு வந்த நலத்திட்டங்கள் ஏராளம். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 31,336 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,21,410 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,32,117 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,01,522 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 87,523 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,84,039 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் என 15 தவணைகளில் ரூ.30,000, தர்மபுரி மாவட்டத்திற்கு 3,010 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என பல்வேறு நலத்திட்டங்கள் லட்சக்கணக்கான மக்களை எட்டியுள்ளன.
பின்தங்கிய மாநிலம் என்று திமுகவினர் கூறும் பீகாரின் பல மாவட்டங்களை விட, தருமபுரி பின்தங்கி உள்ளது. ஆனால், இது குறித்த எந்தக் கவலையும் இன்றி, வட மாநில மக்களை அவதூறாகப் பேசி, மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார். தருமபுரி மக்களை தேசிய அளவில் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாகக் காத்திருந்த தருமபுரி மக்கள், பெரும் அரசியல் மாற்றத்திற்குத் தயாராகி விட்டார்கள் என்பது, கூடியிருக்கும் மக்களின் எழுச்சி ஆரவாரத்தில் உணர முடிகிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் கரங்களை வலுப்படுத்த வாக்களிக்க வேண்டும். மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.