×

28 மாத நிலுவையுடன் ரூ.1,000 வழங்க வேண்டும் - அண்ணாமலை

 

தகுதியுடைய மகளிருக்கே ரூ. 1000  வழங்கப்படும் என மடைமாற்றாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தகுதியுள்ள குடும்பத்தலைவிகளுக்கு  மாதம் தோறும் ரூ.1000  வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.   வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், தகுதியுடைய மகளிருக்கே ரூ. 1000 வழங்கப்படும் என மடைமாற்றாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.  இது தொடர்பாக அண்ணாமலை  தெரிவித்ததாவது, “ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, 'மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி.

வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல்,தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.