×

வெட்டி வீழ்த்தப்பட்ட 40 ஆண்டு ஆலமரம் மீண்டும் நடப்பட்டதில் மகிழ்ச்சி- அன்புமணி ராமதாஸ்

 

வெட்டி வீழ்த்தப்பட்ட 40 ஆண்டு ஆலமரம் மீண்டும் நடப்பட்டதில் மகிழ்ச்சி, அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் சாலையோரத்தில் இருந்து வெட்டி வீழ்த்தப்பட்ட  40 ஆண்டு ஆலமரம் மீண்டும் அதேபகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நடப்பட்டிருக்கிறது. வீழ்த்தப்பட்ட ஆலமரத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. சூனாம்பேட்டில் ஆலமரம் வெட்டப்பட்டதிலிருந்தே அதற்கு புத்துயிரூட்டுவதற்காக பசுமைத்தாயகம்  தொடர் முயற்சிகளை மேற்கொண்டது. அதன்பயனாகவே இது சாத்தியமாகியுள்ளது. இது பசுமைத்தாயகத்திற்கு கிடைத்த வெற்றி. அதற்கு காரணமான பசுமைத்தாயகம் நிர்வாகிகளுக்கு பாராட்டுகள். 


பசுமைத்தாயகத்தின் கோரிக்கையை ஏற்று வீழ்த்தப்பட்ட ஆலமரத்தை மீண்டும் நடுவதற்கு ஏற்பாடு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கும், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்  மற்றும் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.



ஆலமரம் நட்டதுடன் நமது கடமைகள் முடிவடைந்து விடவில்லை. ஆலமரம் மீண்டும் துளிர்க்கும் வரை அதை தோட்டக்கலைத்துறையினர் கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆலமரம் மீண்டும் தழைப்பதையும், பாதுகாக்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.