×

"பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் அவசியம்" - அமைச்சர் அன்பில் அறிவுரை!

 

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. ஆசிரியர்கள் மாணவிகளிடம் அத்துமீறுவதும் அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பதும் முன்பை விட அதிகரித்துள்ளது. சென்னை பத்ம ஷேசாத்ரி பள்ளி ஆசிரியராக இருந்த ராஜகோபாலனுடன் தொடங்கிய இவ்விவகாரம் கோவை பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி வரை நீண்டிருக்கிறது. மிதுன் சக்கரவர்த்தியால் மாணவி தற்கொலையே செய்துகொண்டு விட்டார்.

இதனால் பள்ளிகளில் பாதுகாப்பை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு அரசு உள்ளது. இதில் மிக முக்கியப் பங்கு பள்ளிக்கல்வித் துறைக்கும் அத்துறை அமைச்சரான அன்பில் மகேஷுக்குமே உண்டு. இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "பள்ளி மாணவிகளுக்கு சில பிரச்சினைகள் வருகின்றன. பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. பெண்கள் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை அவசியம் பொருத்த வேண்டும். ஆசிரியர் மாணவியிடம் பாலியல் செயலில் ஈடுபட்டார் என்பதால் ஆசிரியர்கள் அனைவரையும் குறைகூற முடியாது. 

தனியார் பள்ளிகளில் மாணவிகள் இதுபோன்ற பாலியல் புகார் கூறினால், அதை உடனடியாக துறையின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று அதை மறைக்க முயலக் கூடாது. ‘மாணவிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் பள்ளி வெளிப்படையாக நடவடிக்கை எடுக்கிறது' என்று பள்ளியின் மீது பெற்றோருக்கு நம்பிக்கை அதிகரிக்குமே தவிர நற்பெயருக்கு களங்கம் ஏற்படாது” என்றார்.