தமிழகம் முழுவதும் வெளியான முக்கிய அறிவிப்பு..!
பள்ளி கல்வித் துறை அனைத்து தலைமையாசிரியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பிடப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
- பள்ளியினை சுற்றியுள்ள இடங்களில் தெருநாய்கள் இருப்பதை கண்டறிந்தால் உடனடியாக உள்ளாட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
- மாணவர்கள் தெருவில் உள்ள நாய்களுடன் விளையாடுவதோ, அவற்றிற்கு உணவளிப்பதோ தவிர்க்கப்பட தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.
- ரேபிஸ் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
- வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும்.
- பள்ளியின் அறிவிப்பு பலகையில் தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்த விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
- தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்த விழிப்புணர்வை, காலை வணக்கக்கூட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
- தெரு நாய்க்கடிக்கு ஒரு மாணவர் உட்பட்டிருப்பின், அதை எவ்வித தயக்ககமுமின்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்க உரிய அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்
இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளித் தலைமையாசிரியர்கள் ஒரு நோடல் அதிகாரியை (Nodal Officer) நியமித்து, வளாகத்தின் பராமரிப்பு, தூய்மை மற்றும் தெரு நாய்கள் வளாகத்திற்குள் நுழையவோ அல்லது வசிக்கவோ இயலாதவாறு மேற்பார்வையிட வேண்டும் எனவும், அதிகாரியின் விவரங்கள் அறிவிப்பு பலகையில் அனைவரும் அறியும் வகையிலும், அவர் தொடர்பான விவரங்களை உள்ளாட்சி அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கால்நடை துறை சார்பில் தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களுக்கும், வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், அவற்றை பிடித்து கருத்தடையும் செய்யப்படுகின்றன. ஆனாலும், உள்ளாட்சி அமைப்புகள் இது தீவிர கவனம் செலுத்தாததால், தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.