×

கூட்டுறவு சங்கங்களில் நடந்த முறைகேடுகள் என்ன? தமிழக அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் தினகரன்

 

கூட்டுறவு சங்கங்களில் என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றன என்பதைப் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது . இதையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்யும் மசோதாவை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்தார்.  அத்துடன் கூட்டுறவு சங்க அலுவலர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகலிருந்து  3 ஆண்டாக குறைக்கப்பட்டது. 

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நிதி மோசடிகள் நடைபெற்றதாகக் கூறி தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பை கலைக்க சட்டம் கொண்டுவந்துள்ள தி.மு.க. அரசு, அத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? முன்பு நடத்தப்பட்ட கூட்டுறவுத் தேர்தலில் பழனிசாமி கம்பெனியோடு 60:40 பங்கீட்டில் தி.மு.க.வினர் சேர்ந்து கொண்டுதானே ஏறத்தாழ எல்லா கூட்டுறவு சங்கங்களிலும் பதவிக்கு வந்தார்கள்?! அப்படியென்றால், கூட்டுறவு சங்கங்களில் நடந்திருப்பதாக தற்போதைய தி.மு.க. அரசு கூறும் மோசடிகளில் அவர்களது கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறதல்லவா? எந்தெந்தக் கூட்டுறவு சங்கங்களில் என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றன?அதற்கு காரணமானவர்கள் யார்? என்பதைப் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதைச் செய்யாமல் கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை குறைப்பதாலோ, பதவிகளின் பெயர்களை மாற்றுவதாலோ அவற்றில் மலிந்திருக்கிற சீர்கேடுகளைச் சரிசெய்ய முடியாது.  மாறாக, கூட்டுறவு சங்கங்களை மொத்தமாக தி.மு.க.வினர் கபளிகரம் செய்துகொள்ளவதற்கே அரசின் இந்த நடவடிக்கை வழிவகுக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.