×

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்திடுக - தினகரன் வலியுறுத்தல்!

 

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்  என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் முழு நேர மருத்துவர்கள் நியமிக்கப்படாமலும், நோயாளிகளுக்கான அவசர மற்றும் தீவிர சிகிச்சைக்கான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தராமலும் இருப்பது கண்டனத்திற்குரியது.

 நாள் தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு தேவையான எவ்வித மருத்துவ வசதிகளும் இல்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு ஆதரவாக அப்பகுதி வணிகர்களும் முழு கடையடைப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனயையே நம்பியிருக்கும் சூழலில், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக நியமிப்பதோடு, தேவையான மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தந்து பொதுமக்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.