×

ஈரோட்டில் அம்மா உணவக ஊழியர்கள் திடீர் போராட்டம்

 

ஈரோட்டில் அம்மா உணவக ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் உணவு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி 34 வது வார்டுக்கு உட்பட்ட நாச்சியப்பா வீதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 10 பேர் 11 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். தற்போது விஜயலட்சுமி மற்றும் துளசிமணி என்ற இரு பெண்கள் புதிதாக பணியமர்த்தபட்டுள்ளனர். இவர்கள் டோக்கன் வழங்கும் பணியை மட்டும் செய்வதாகவும், சமையல் வேலை, தூய்மை பணி என மற்ற வேலைகளை செய்வதில்லை என்பது அங்கு பணியாற்றும் சக பணியாளர்களின் புகாராகும்.

இதனை கண்டித்து அம்மா உணவக ஊழியர்கள் 10 பேர் இன்று காலை பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக பணியமர்த்தப்பட்ட நபர்களை அவர்கள் ஏற்கெனவே வேலை செய்த இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தினர். மேலும் மாநகராட்சி இரண்டாம் மண்டல தலைவர் தங்களை அவரது வீட்டு விசேஷங்களுக்கு வேலை செய்ய பயன்படுத்துவதாகவும், இரவு நேரங்களில் கூட்டம் நடத்துவதாகவும் குற்றம்சாட்டினர்.

போராட்டம் குறித்த தகவலறிந்து சம்பவ பகுதிக்கு வந்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையினை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்தனர். இதனால் 2 மணி நேரம் தாமதமாக பொதுமக்கள் உணவருந்தினர்.