#BREAKING சென்னை போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் நியமனம்
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் சமயத்தில் நியமிக்கப்பட்ட அபின் தினேஷ் மொடக் குற்றப்பிரிவு சிஐடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த அமல்ராஜ்?
ஏ. அமல்ராஜ் (A. Amalraj) 1996 ஆம் பேட்ச் ஐ.பி.எஸ் (IPS) அதிகாரியாவார். இவர் தமிழ்நாடு அரசின் காவல் துறையில் கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP) அந்தஸ்தில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னர் இவர் தாம்பரம் காவல் ஆணையராகவும், தமிழ்நாடு காவல் அகாடமியின் (TN Police Academy) இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஒரு திறமையான காவல் அதிகாரியாக இருப்பதுடன், பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். காவல்துறையினருக்கான மேலாண்மை மற்றும் விழிப்புணர்வு சார்ந்த நூல்களைப் படைத்துள்ளார். தமிழ்நாடு காவல் துறையின் அதிகாரப்பூர்வ பாடல்களில் ஒன்றான 'காவலே தியாகமே' பாடலை எழுதியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது சீரிய பணிக்காக குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.