×

‘நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் வேட்புமனு நிராகரிப்பு

 

‘நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் ஆலங்குளத்தில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் “நடமாடும் நகைக்கடை” எனப் பெயர் பெற்ற ஹரி நாடார், இந்த முறை சிறையிலிருந்தே போட்டியிடுவதாக அறிவித்து அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.  உடல் முழுவதும் கிலோகணக்கில் தங்க நகைகள் அணிந்து ஹெலிகாப்டரில் வந்து அப்போது பிரசாரம் செய்த அவர்,  37,726 வாக்குகள் பெற்று பேசு பொருளானார். பனங்காட்டுப்படை கட்சியில் இருந்து விலகிய அவர், பின்னர் “சத்திரிய சான்றோர் படை” என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்கிடையில் வங்கிக் கடன் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார். சில தினங்களுக்கு முன்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது கட்சி நிர்வாகிகளை சந்தித்த ஹரி நாடார், வரும் தேர்தலில் சிறையிலிருந்தே ஆலங்குளத்தில் போட்டியிட ஏற்பாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தினார். 


இதனைத் தொடர்ந்து, சத்திரிய சான்றோர் படை தலைவர் ஹரி நாடார் வேட்பு மனு, முகவர் அலெக்ஸ் நாடார் மூலம்  ஆலங்குளம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வகையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஹரி நாடார் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹரி நாடார் சிறையில் இருந்து முகவர் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தது செல்லாது என தேர்தல் அலுவலர் கூறியுள்ளார்.