×

ஒரு வட்டார கட்சியாக சுருங்கிவிட்டது அதிமுக - டிடிவி தினகரன்.. 

 

எடப்பாடி பழனிசாமியால் அதிமுக ஒரு வட்டார கட்சியாக சுருங்கிவிட்டது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்  6ம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, அக்கட்சியின் பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் தலைமைக்கழகத்தில் கழக கொடியேற்றினார். தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “எவ்வளவு முயற்சி செய்தும் அதிமுகவால் இடைத்தேர்தலில் வெல்ல முடியவில்லை. அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. இன்னும் பலவீனப்பட்ட பிறகே திருந்துவார்கள்.  சுய காரணங்களுக்காக அமமுகவினர் வேறு கட்சிக்கு செல்வதை தடுக்க முடியாது.

உண்மையான தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள் .  எடப்பாடி பழனிசாமி பணபலத்துடன் களத்தில் இறங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தலைமையால், அதிமுக ஒரு வட்டாரக் கட்சியாக மாறிவிட்டது. அதிமுகவில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நிலை தற்போது உள்ளது. இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் துரோகிகள் கையில் சிக்கி கொண்டுள்ளது. வருங்காலத்தில் ஜெயலலிதாவின் லட்சியங்களை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கப்போவது அமமுக தான்" என்று பேசினார்.