×

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு தள்ளுபடி!

 

உள்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்,  கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கும், தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவுக்கும் அனுப்பிய மனுவை பரிசீலிக்கும்படி, உத்தரவிடக் கோரி அதிமுக உறுப்பினர் நல்லபெருமாள் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, கட்சியில் பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இரு பதவிகளுக்கும் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, உள்கட்சி தேர்தல், நிர்வாகத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்பதால், மனுதாரர் கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி, உத்தரவிட முடியாது எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.