அ.தி.மு.க. சார்பில் போராட்டம் அறிவிப்பு..!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;
2021 டிசம்பர் மாதம், கரூர் மாவட்டத்தில் புதிய அரசு வேளாண்மைக் கல்லூரி துவங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு, அம்மா மண்டபத்தில் புதிய வேளாண்மைக் கல்லூரி தொடங்கப்பட்டு, மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான ஆய்வகம், கழிப்பிட வசதிகள், தங்கும் வசதிகள் முதலானவை செய்து தரப்படாத காரணத்தால் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இக்கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவியர், தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, கடந்த 7.3.2024 மற்றும் 6.5.2025 ஆகிய தேதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தியும், அரசு இவ்விஷயத்தில் அக்கறை காட்டாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தராததை கண்டித்தும்; மாணவர்கள் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்குத் தேவையான வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தியும், அ.தி.மு.க. கரூர் மாவட்டத்தின் சார்பில், 11.6.2025 – புதன் கிழமை காலை 10 மணியளவில், கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி, தலைமையிலும்; கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.